
விழிப்புணர்வு நிகழ்வு – RRC & NSS Units: 54 & 56
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி மற்றும் துணை முதல்வர் முனைவர் அசோக் அவர்களின் வழிகாட்டலில் “உடல் நலம் காப்போம்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் செஞ்சுருள்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.தேவராஜ் (வரலாற்றுத்துறை-தலைவர்) அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசி, நிகழ்வின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்கள். நிகழ்வின் தொடக்கமாக விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் C.செந்தில் குமரன் அவர்கள் “உடல் நலம் காப்போம்”, எய்ட்ஸ் பரவும் விதம், மாணவப் பருவத்தில் செய்யக்கூடாத செயல்கள்,வருமுன் காப்பது எப்படி என்பன போன்ற கருத்துகளை எடுத்துரைத்தார்கள். தூத்துக்குடி தலைமை மருத்துவக் கல்லூரி ஆலோசகர் திருமதி லலிதா அவர்கள் கல்லூரிக் காலங்களை கண்ணும் கருத்துமாக கடந்து செல்லவும்,பெற்றோருக்கு பெருமைதரும் செயல்களை எவ்விதம் செயல் படுத்துவது என்பன போன்ற கருத்துரைகளை எடுத்துரைத்தார்கள். மருத்துவக்கல்லூரி அலுவலர்கள் திருமதி ரேணுகா,திருமதி சீனி வாசுகி ஆகியோர் கலந்துகொண்டு டெங்கு, மலேரியாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்வை காமராஜ் கல்லூரி, செஞ்சுருள்ச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ஆனந்த் (அணி எண்-54), திரு.மா.அய்யனுராஜ் (அணி எண்-56) ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் 300 மாணவர்கள் பங்குபெற்று பயன் பெற்றனர்.